
கடந்த 1912ம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாட்டின் லோவஸ்டப்ட் பகுதியில் வசித்து வருபவர் ரோஜர் டைபால்(74). இவரது வீட்டில் ஒஸ்ரம் என்ற நிறுவனம் தயாரித்த 230 வோல்ட் மற்றும் 55 வாட் டிசி வகையை சேர்ந்த பல்பு ஒன்று பல ஆண்டுகளாக ஒளி கொடுத்து வருகிறது.
இது குறித்து ஆராய்ந்த ஒஸ்ரம் நிறுவனம், ரோஜர் டைபால் அனுப்பி வைத்த மின்குமிழ் கடந்த 1912ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்தது. இதன்மூலம் கடந்த 100 ஆண்டுகளாக ரோஜர் டைபாலின் வீட்டில் அந்த மின்குமிழ் ஒளி கொடுத்துள்ளது தெரிய வந்தது.
இது குறித்து ரோஜர் டைபால் கூறியதாவது,
இங்கிலாந்தில் உள்ள லோவஸ்டப்ட் பகுதியில் உள்ள எங்களின் வீட்டில் பல ஆண்டுகளாக இந்த மின்குமிழ் ஒளி கொடுத்து வந்தது. இதன்பிறகு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தோம். அங்கேயும் இந்த மின்குமிழ் தொடர்ந்து ஒளி கொடுத்தது.
இதனையடுத்து அந்த மின்குமிழ் எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதை அறிய அதன் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதினேன். அதற்கு பதிலளித்த ஒஸ்ரம் நிறுவனம், கடந்த 1912ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்தது. மேலும் இதற்காக லண்டனை சேர்ந்த ஒஸ்ரம் ஜிஇசி நிறுவனம் எனக்கு சான்றிதழ் அளித்துள்ளது என்றார்.
முன்னதாக இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு நீண்ட ஆண்டுகளாக ஒளி கொடுக்கும் மின்குமிழ், கடந்த 2008ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மின்குமிழ், கடந்த 1895ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் மின்குமிழ் கண்டுபிடித்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.