mercredi 8 janvier 2014

ஓவியக் கலை

ஓவியக் கலை
ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி,காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலைஆகும்.
ஒவ்வு என்னும் வினையடியாகப் பிறந்த ஓவு, ஓவம், ஓவியம் என்னும் இம்மூன்று சொற்களும் சித்திரத்தையே குறிக்கின்றன. 'ஓவியனுள்ளத் துள்ளியது வியப்போன்' எனக்கூறும் மணிமேகலைச் செய்யுள் வரியிலிருந்து தமிழக ஓவியர்கள் புறக்கண் கண்டதை அகக்கண் கொண்டு நோக்கி, அதை அகத்தினின் தீட்டி பின்னர் பிற ஊடகங்களில் வரைந்தனர் என்பது புலனாகிறது.
நிறம் தீட்டாமல் வரையும் ஓவியத்துக்கு புனையா ஓவியம் (Outline drawing) என்று பெயர். 'புனையா ஓவியம் கடுப்ப' என நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.
ஓவியத் தொழிலுக்கு 'வட்டிகைச் செய்தி' என்னும் பெயரும் உண்டு. வட்டிகை என்றால் துகிலிகை (brush).
ஓவியங்களாக இன்று காண்பவற்றுள் மிகப் பழைமைமிக்கவை பல்லவர் காலத்து ஓவியங்களே.
ஓவியக்கலை, பல்வேறு ஆக்கத்திறன்களை, உள்வாங்குவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல்(abstract) தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு செய்தியை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது அரசியல்சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும். ஓவிய வரலாற்றின் பெரும்பகுதியில்ஆன்மீகம் சார்ந்த எண்ணக்கருக்களும், அழகூட்டல்களும் முதன்மை பெறுகின்றன. இத்தகைய ஓவியங்கள் மட்பாண்டங்களில் வரையப்பட்ட புராணக் கதைக் காட்சிகளிலிருந்து, வழிபாட்டுக்குரிய கட்டிடங்களில், சுவர்களையும், மேல் விதானங்களையும் அழகூட்டும் சமயம் சார்ந்த, பெரிய ஓவியங்கள் வரை வேறுபடுகின்றன.
வெளியில் இருக்கும் ஒவ்வொரு புள்ளியும் வெவ்வேறு ஒளிச் செறிவைக் கொண்டுள்ளது. இந்த ஒளிச் செறிவு வேறுபாடுகளை ஒரு ஊடகத்தில் கொண்டுவருவதன் மூலமே ஓவியம் வரையப்படுகிறது. இந்த ஒளிச்செறிவுகளைக் கறுப்பு, வெள்ளை ஆகிய நிறங்களாலும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட பலவிதமான சாம்பல்நிறச் சாயைகளாலும் காட்டலாம். நடைமுறையில், பல்வேறு ஒளிச் செறிவுகளைக் கொண்ட மேற்பரப்புக்களை உரிய இடங்களில் ஆக்குவதன் மூலம் ஓவியர்களால் வடிவங்களை உருவாக்க முடியும்; ஒரே செறிவுகளைக் கொண்ட நிறங்களை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் குறியீட்டு வடிவங்களையே காட்ட முடியும். ஆகவே, ஓவியத்தின் அடிப்படை வழிமுறை, வடிவவியல் உருவங்கள், குறியீடுகள் போன்றகருத்தியல் வழிமுறைகளில் இருந்தும் வேறுபட்டது ஆகும். எடுத்துக்காட்டாக, ஒரு ஓவியர், ஒரு வெண்ணிறச் சுவரை ஒவ்வொரு புள்ளியிலும் வெவ்வேறான ஒளிச் செறிவுகளைக் கொண்ட ஒன்றாகப் பார்க்கிறார். இது அயலிலுள்ள பொருள்களினால் ஏற்படும் நிழல்கள், தெறிப்பு ஒளி என்பனவற்றால் ஏற்படுகிறது. ஆனால் கருத்தியல் அடிப்படையில் இருட்டிலும் கூட வெண்ணிறச் சுவர், வெண்ணிறச் சுவரே. தொழில்நுட்ப வரைதலில் காணும் கோடு ஒன்றின் தடிப்பும் கருத்தியல் அடிப்படையிலானதே. இது ஒரு பொருளின் கருத்தியல் வெளி விளிம்புகளைக் குறிக்கிறது. இது ஓவியர்கள் பயன்படுத்தும் புலன் காட்சிச் சட்டகத்திலும் (perceptual frame) வேறானதொரு சட்டகத்தில் அமைந்தது ஆகும்.
இசைக்குச் சுருதியும் தாளமும் போல,நிறமும், நிறத்தொனியும் ஓவியத்துக்கு அடிப்படை ஆகும். நிறம் மிகுந்த தற்சார்பு (subjective) கொண்டது. பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்டாலும் கூட, இவை கவனிக்கத்தக்க உளவியல் தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை. சில பண்பாடுகளில் கறுப்பு துக்கத்துக்கு உரியது வேறு சில பண்பாடுகளில் வெள்ளை நிறமே துக்கத்தைக் குறிக்கிறது.
பல்வேறு வகையைன வண்ணப்பூச்சுகள் ஓவியம் வரைவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக வண்ணப்பூச்சுகளை தேர்ந்தெடுப்பதற்கு அதன் பாகுத்தன்மை, கரைதிறன், வண்ணப்பூசின் இயல்புகள் போன்றவற்றுடன் உலரும் நேரம் ஆகிய கூறுகள் கணக்கிடப்படுகின்றன.
நெய்யோவியம் (Oil)
நீர்வர்ணம் (Watercolor)
சுதை ஓவியம்
மை ஓவியங்கள் (Ink)
பூச்சு ஓவியங்கள் (Enamel)
நீர் கலந்த ஆயில் ஓவியங்கள் (Water miscible oil paint)
அக்ரலிக் (Acrylic paint)
வண்ணக்கோல் (Pastel)
சூடான மெழுகு (Hot wax

Aucun commentaire:

Enregistrer un commentaire

Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.