vendredi 3 janvier 2014

சுப்பிரமணிய பாரதியார்,

சுப்பிரமணிய பாரதியார்

தமிழ்நாட்டுப் பெருங் கவிஞர்களுள் ஒருவர் சி.சுப்பிரமணிய பாரதி. இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த எட்டயபுரம் என்ற ஊரில், 1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாளில் (தமிழ்க் கணக்குப் படி சித்திரபானு ஆண்டு 
கார்த்திகை மாதம், 27ஆம் நாள் மூல நட்சத்திரத்தில் பிறந்தார்.

 தந்தையார் பெயர் சின்னசாமி ஐயர்; தாயார் பெயர் இலட்சுமி அம்மாள். பிற்காலத்தில் 'மகாகவி' என்று அனைவராலும் மதிப்போடும் மரியாதையோடும் அழைக்கப் பெற்ற பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியம். இது அவருடைய பாட்டனாரின் பெயர். இப்பெயரைச் செல்லமாகச் சுருக்கிச் 'சுப்பையா' என்றே அவருடைய உற்றாரும் உறவினரும் அழைத்தனர்.சின்னசாமி ஐயர் அந்த நாளில் எட்டயபுரம் மன்னரின் சமஸ்தானத்தில் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றிருந்தார். சுப்பையா இளமைப் பருவத்தில் தம் தந்தையிடமே தொடக்கக் கல்வி கற்றார். சின்னசாமி ஐயர் ஆங்கிலம் நன்கு அறிந்தவர்; தமிழில் புலமை மிக்கவர்; கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர்; கூரிய மதி நுட்பம் கொண்டவர். எனவே, அவர் தம் மகனும் கணிதம், ஆங்கிலம் போன்ற துறைகளில் புலமை பெறவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் சுப்பையாவோ கவிதையில் நாட்டம் கொண்டிருந்தான். நல்ல தமிழ்க் கவிதை புனைய விரும்பினான்.  தீயைப் போல ஒளி வீசும் கவிதை, இந்த வையகத்தையே காத்து வளர்த்திடக் கூடிய கவிதை.  இதுவே அவன் கனவாக இருந்தது. சுப்பையாவின் இளமைப் பருவம் பற்றி திரு ரா.அ.பத்மநாபன் குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத்தக்கது:
“சுப்பையாவுக்கு ஆங்கிலத்தில் ஈடுபாடில்லை. கணக்கும் யந்திரக் கலையும் வேப்பங் காயாகக் கசந்தன. தகப்பனார் 'கணக்குப் போடு' என்றால், அவன் மனதுக்குள், 'கணக்கு', 'பிணக்கு', 'வணக்கு', 'ஆமணக்கு' என்று எதுகையும் மோனையுமாக அடுக்கிக் கொண்டே போவான்.”சுப்பையா 1887ஆம் ஆண்டில், தம் ஐந்தாவது வயதில் தாயை இழந்தார். தாயற்ற சேயான அவர், சிறிது காலம் தாய்வழிப் பாட்டனாரின் வீட்டில் வளர்க்கப் பெற்றார்.
என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்
ஏங்கவிட்டு விண் எய்திய தாய் 

எனப் பிற்காலத்தில் பாடிய 'சுயசரிதை'யில் தம் தாயைப் பற்றிய நினைவைப் பதிவு செய்துள்ளார் பாரதியார். தாயின் மறைவுக்குப் பிறகு, பாட்டியான பாகீரதி அம்மாளே சுப்பையாவை அன்புடன் வளர்த்து வந்தார்.
1889ஆம் ஆண்டில் சின்னசாமி ஐயர், வள்ளியம்மாள் என்னும் மங்கை நல்லாளை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். அச் சமயம் குலமரபுப்படி சிறுவன் சுப்பையாவுக்கு உபநயனம் செய்விக்கப்பட்டது. சிற்றன்னையான வள்ளியம்மைதான் சுப்பையாவைப் பரிவுடன் போற்றி வளர்த்த வளர்ப்புத் தாயார் ஆவார். பிள்ளைப்பருவத்தில் சுப்பையா தம் தந்தையிடம் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார். சுப்பையாவை உரிய பருவத்தில் தந்தை பள்ளிக்கு அனுப்பினார். பள்ளியில் படிக்கும் போதே, சுப்பையா தம் தந்தையுடன் எட்டயபுரம் சமஸ்தானத்திற்குச் செல்வார்; அங்கே நடைபெறும் விவாதங்களைக் கூர்ந்து கேட்பார்.  தந்தையும் கல்வியறிவு மிக்கவர்; பழகிய இடமோ கற்றோர் அவை. எனவே இயற்கையிலேயே அதுவும் இளமையிலேயே கவிதைகள் புனையும் ஆற்றல் சுப்பையாவுக்கு வாய்த்து விட்டது. அவர் தம் ஏழாம் வயதிலேயே கவிதை புனையத் தொடங்கி விட்டார். அவ்வப்போது சமஸ்தானப் புலவர்கள் தரும் ஈற்றடிகளைக் கொண்டே அருமையான பாடல்களைப் பாடி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அத்தகைய சுவையான நிகழ்ச்சி ஒன்று இதோ!
ஒரு முறை எட்டயபுரம் சமஸ்தானத்தில் கூட்டம் கூடியிருந்தது. காந்திமதி நாதன் என்ற புலவரும் அவையில் இருந்தார். சிறுவனான சுப்பையாவும் இருந்தார். சுப்பையாவைச் சற்று ஏளனம் (கிண்டல்) செய்ய விரும்பினார் புலவர். 'பாரதி சின்னப் பயல்' என்று முடியும் படியாக ஒரு வெண்பா இயற்ற முடியுமா என்று சவால் விடுத்தார்.
சிறுவன் ஆயினும் தம் புலமைத் திறமையும் அறிவுக் கூர்மையும் வெளிப்பட, ஒரு பாடல் புனைந்து பாடினார். சுப்பையாவின் பாடல் 'பாரதி சின்னப் பயல்' என்றுதான் முடிந்தது. ஆனால் பொருளோ 'காந்திமதிநாதனைப் பார்! அதி சின்னப் பயல்' என்று ஆகும்படி அமைந்திருந்தது. பாரதியின் திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது, ஏளனம் செய்ய நினைத்தவர் வெட்கித் தலை குனியும்படியாக ஆயிற்று.
சின்னசாமி ஐயர் தம் மகன் சுப்பையா கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் சுப்பையாவை மிகுந்த கண்டிப்புடன் வளர்த்தார்; பிற சிறுவர்களுடன், வீதியில் சென்று விளையாட அனுமதிக்கவில்லை. சுப்பையாவால் மற்ற சிறுவர்களைப் போல ஆடியும், ஓடியும், துள்ளித் திரியவும் முடியவில்லை. அந்த ஏக்கத்தை அவர் தம்'சுயசரிதை'யில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
     ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பன்மரத்து ஏறிஇ றங்கியும்
     என்னொடுஒத்த சிறியர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சியான்
     வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்,
தூண்டு நூற் கணத்தோடு தனியனாய்த்
     தோழமை பிறிதின்றி வருந்தினேன்
இளமைக்கால ஏக்க உணர்வை இப்பாடலில் அழகுறப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் பாரதி. காற்றை வேலியிட்டுத் தடுக்க முடியுமா, என்ன? அல்லது, கடலுக்குத் தான் மூடிபோட்டு அடைத்து விடமுடியுமா? பிறவிக் கவிஞன் பாரதியின் கவித்திறமையைப் பள்ளிக்கூடம் மூட்டைகட்டி ஒதுக்கி வைக்க முடியவில்லை.
"ஏழெட்டு வயதிலேயே மோகனமான பகற்கனவுகள் காண்பதிலும், சிங்கார ரசமுள்ள கவிகள் இயற்றுவதிலும் பிரியம் கொண்டார் . . . பசி, தாகம் கூட அவருக்குத் தெரிவதில்லை” என்கிறார் பாரதியின் சரித்திரத்தைப் பின்னாளில் எழுதிய அவர் மனைவி செல்லம்மா. 
ஆம். பள்ளிப் படிப்பிலே அறிவு சென்றிடவில்லை என்றாலும், கவிதை புனையும் ஆர்வம் மட்டும் அவர் உள்ளத்தின் ஆழத்தில் வளர்ந்த வண்ணமாகவே இருந்து வந்தது. நாட்டிலும் காட்டிலும் நாளெல்லாம் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தார் அவர். 
பள்ளிப் படிப்பினிலே  மதி
பற்றிட வில்லை எனிலும் தனிப்பட
வெள்ளை மலரணை மேல்  அவள்
வீணையும் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருள் அமுதும்  கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா!

 
(அவள் = கல்விக் கடவுள் ஆகிய ஸரஸ்வதி; விள்ளும் = உணர்த்தும்)
என்று பின்னாளில் 'ஸரஸ்வதி காதல்' என்னும் தலைப்பில் பாடிய தோத்திரப் பாடலில் பாரதியார் தமது இளமைப் பருவத்து அனுபவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.1893ஆம் ஆண்டில் சுப்பையாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓர் அனுபவம் சிறப்பானது. எட்டயபுர மன்னருடைய அவைக் களத்தில் சிவஞான யோகியின் தலைமையில் புலவர்கள் கூடியிருந்தனர். அப்புலவர்கள் பதினொரு வயது சுப்பையாவின் கவிபாடும் திறனைக் கண்டு வியந்தனர். அவர் நாவில் கலைமகள் தாண்டவமாடுவதைக் கண்டு 'பாரதி' (கலைமகள்) என்ற பட்டத்தினை அவருக்கு வழங்கினர். புலவர்கள் வழங்கிய இந்தப் பட்டமே சுப்பையாவின் பெயருக்கு மகுடமாக என்றென்றும் நிலைத்துவிட்டது. அன்று முதல் சுப்பையா சுப்பிரமணிய பாரதி ஆனார்.சின்னஞ்சிறு வயதில் யாருக்குமே கிடைக்காத பட்டம் புலவர்களால் தம்மகனுக்கு வழங்கப் பெற்றதை நினைத்து உள்ளூர மகிழ்ச்சியடைந்தாலும், தம் மகன் படித்துப் பட்டம் பெற்று உயர்பதவியில் அமர வேண்டும் என்றே பெரிதும் ஆசைப்பட்டார் சின்னசாமி ஐயர். எனவே, அவர் பாரதிக்கு ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்க வேண்டி, அவரை 1894ஆம் ஆண்டில் திருநெல்வேலி இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார்.
ஆங்கிலக் கல்வியில் பாரதிக்குச் சற்றும் விருப்பம் இல்லை. அவர் மனத்தில் பெரும் கசப்பை ஏற்படுத்தியது அக்கல்வி. பின்னாளில் தம்'சுயசரிதை'யில் ஆங்கிலக் கல்வியை 'அற்பர் கல்வி' என்றும் 'பேடிக் கல்வி' என்றும் பலவகையில் தூற்றுகிறார். இக்கல்வியினால் அவர் பெற்ற பயன் என்ன என்று சொல்கிறார் பாருங்கள்:
செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;
     தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள்துணையும்கண்டிலேன் அதை
     நாற் பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!
வேண்டா வெறுப்பாக ஆங்கிலக் கல்வியைத் தொடர்ந்த பாரதியார் 1897ஆம் ஆண்டு வரை படித்தார். அப்போதைய ஐந்தாம் படிவம் என்ற பத்தாம் வகுப்புக் கல்வியை முடித்தார்.
பாரதியாருக்குப் பள்ளி நாட்களிலேயே அவருடைய பதினான்கு வயதிலேயே திருமணம் நிகழ்ந்தது. 1897ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் நாள் கடையத்தைச் சேர்ந்த செல்லப்பா ஐயரின் புதல்வி செல்லம்மாள் என்ற ஏழு வயதுச் சிறுமிக்கும் பாரதிக்கும் அவரது தந்தையார் திருமணம் செய்து வைத்தார்.பாரதிக்குத் திருமணம் நடந்து ஓராண்டு கழிந்தது. இந்த நிலையில் அவரது வாழ்வில் ஒரு பெரும்துயரம் நிகழ்ந்தது. பாரதியின் தந்தையார் தம் செல்வத்தை இழந்து வறுமைக்கு ஆளானார். பலப்பல வாணிகம் ஆற்றி மிக்க பொருள் சேர்த்துப் பெருவாழ்வு வாழ்ந்த சின்னசாமி ஐயர் துயரக்கடலில் வீழ்ந்தார். இதனால் உள்ளம் குன்றித் தளர்ந்த அவர் 1898ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்தார். ஐந்து வயதில் தாயை இழந்த பாரதியார் பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தனிமரமாய் நின்றார். தந்தை இறந்த பின்னர், யாரும் ஆதரவு காட்ட இல்லாத நிலையில் அகதியைப் போல் ஆனார் பாரதியார். தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில் அவர் பாடியிருக்கும் அடிகள் வருமாறு:
தந்தைபோயினன், பாழ்மிடி சூழ்ந்தது;
     தரணி மீதினில் அஞ்சல் என்பார்இலர்;
சிந்தையில்தெளிவு இல்லை; உடலினில்
     திறனும்இல்லை; உரன்உளத்து இல்லையால்
எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்?
     ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?
(மிடி = வறுமை; தோற்றிலது = தோன்றவில்லை)இனி என்ன செய்வது, எங்கே போவது என்ற கேள்விகள் பிறந்தன பாரதியின் வாழ்விலே. கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை அல்லவா? எந்த வழியும் புலப்படாமல் இருந்த நிலையில் காசி நகரில் வாழ்ந்து கொண்டிருந்த பாரதியாரின் அத்தை குப்பம்மாள் அவருக்கு உதவ முன் வந்தார். அவரது அழைப்பினை ஏற்று 1898ஆம் ஆண்டு காசிக்குச் சென்றார் பாரதியார்.பாரதியார் காசியில் தம் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். அங்கே காசி இந்து கலாசாலையில் சேர்ந்து, வடமொழி, இந்தி ஆகியவற்றைப் பயின்றார்; அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 'பிரவேசப் பரீட்சை'யில் தேறினார். காசி வாழ்க்கை பாரதியாரைப் பன்மொழிப் புலவராக மாற்றியது. அங்கே தான் கச்சம் வைத்து வேட்டி கட்டும் பழக்கமும், தலைப்பாகை கட்டும் பழக்கமும் அவருக்கு ஏற்பட்டன. அவர் மீசை வைத்துக் கொண்டதும் அங்கேதான்.நடை, உடை, பாவனைகளில் மட்டுமன்றி, உணர்வு நிலையிலும் காசி நகர வாழ்க்கை பாரதியாரின் ஆளுமையில் நல்லதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தக் கால கட்டம் நாடெங்கும் திலகர் அலை வீசிய காலம். பத்திரிகைகளின் வாயிலாக நாட்டு நடப்பை அறிந்து கொண்டார் பாரதியார். அதன் காரணமாகச் சுதந்திர உணர்வு என்னும் கனல் அவரது உள்ளத்தில் மூண்டது; நாட்டுச் சிந்தனையே அவரது அன்றாடச் சிந்தனை ஆயிற்று; 'சுதேசியம்' அவரது வாழ்வியல் நெறி ஆயிற்று. இங்ஙனம் காசி நகரின் சூழ்நிலை பாரதியாருக்கு நிரம்பவும் பிடித்துப் போயிற்று; அவர் அங்கேயே நிலையாகத் தங்கிவிடவும் எண்ணம் கொண்டார். ஆனால், எழுதிச் செல்லும் விதியின் கை பாரதியின் வாழ்க்கைப் போக்கை வேறு விதமாக எழுத முடிவு செய்தது.விக்டோரியா மகாராணி மரணமடைந்து, ஏழாம் எட்வர்டு பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியை ஒட்டி, கர்ஸன் பிரபு தில்லியில் ஒரு தர்பார் நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற எட்டயபுரம் மன்னர், திரும்பும் வழியில் பாரதியாரைச் சந்தித்துத் தம் அரண்மனைக்கு வரும்படியாகக் கேட்டுக் கொண்டார். இந்த அழைப்பினை ஏற்று, பாரதியார் 1902 ஆம் ஆண்டு காசியில் இருந்து எட்டயபுரம் திரும்பினார். இது குறித்துச் செல்லம்மாள் பாரதி தம் நூலில் பதிவு செய்திருப்பது வருமாறு:
“காசியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், பாரதியாருக்கு வடநாட்டிலேயே தங்கிவிட வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை மாற்றி அவரைத் தென்னாட்டுக்கு அழைத்து வந்தவர் எட்டயபுரம் மகாராஜாதான். மகாராஜா பாரதியாரைச் சந்தித்துத் தம்முடன் எட்டயபுரம் வந்து இருக்கும்படி அழைத்தார்.  அவரைத் தட்டிச் சொல்ல மனமின்றி, ஊருக்கு வந்து என்னையும் அழைத்துக் கொண்டு எட்டயபுரத்தில் குடித்தனம் ஆரம்பித்தார்”எட்டயபுரம் சமஸ்தானத்தில் பாரதியார் பணியில் அமர்ந்தார். மன்னருக்குப் பத்திரிகைகள், புத்தகங்கள் படித்துக் காட்டுவது, அரசவைக்கு வருகின்ற வித்துவான்களுடன் கலந்துரையாடுவது, வேதாந்த, தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்வது இவைதாம் பாரதியாரின் அன்றாட அலுவல்கள்.
எட்டயபுர வாழ்க்கை செல்லம்மாளுடன் இணைந்து மனையறம் நடத்தும் வாய்ப்பினைப் பாரதியாருக்கு நல்கியது. இக்கால கட்டத்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன், கீட்ஸ் போன்றோரது கருத்துகளால் பாரதியார் பெரிதும் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக அக்கவிஞர்களின் விடுதலை உணர்வு அவரை மிகவும் கவர்ந்தது. இதனை, “அந்தக் காலத்தில் அவர் 'ஷெல்லிதாசன்' என்னும் புனைபெயருடன் பத்திரிகைகளுக்குச் சில வியாசங்கள்கூட எழுதியதுண்டு” (பாரதியார் சரித்திரம், எனச் செல்லம்மா பாரதி தம் நூலில் நினைவு கூர்ந்துள்ளார்.விடுதலை உணர்வில் தீராத வேட்கை கொண்டிருந்த பாரதியாருக்கு நாளடைவில் சமஸ்தானப் பணி சலிப்பைத் தந்தது. 1904ஆம் ஆண்டு அவர் அப் பணியில் இருந்து விடுதலை பெற்றார்; எட்டயபுரம் ஊரை விட்டும் வெளியேறினார். தம் மனத்திற்கு உகந்த பணி ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து அவர் மதுரைக்கு வந்தார். மதுரையில் புலவர் கந்தசாமி நடத்திய 'விவேகபாநு' என்ற பத்திரிகையில் 1904ஆம் ஆண்டு ஜூலை மாத இதழில் பாரதியாரின் 'தனிமை இரக்கம்' என்ற பாடல் வெளியாயிற்று. இதுவே அச்சு வடிவில் வெளிவந்த பாரதியாரின் முதல் பாடலாகும் என்பர் மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் பாரதியார் தற்காலிகமாகத் தமிழாசிரியராகப் பணியாற்றினார்; 1.8.1904 ஆம் ஆண்டு முதல் 10.11.1904 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ மூன்று மாத காலம் அப்பணியில் இருந்தார். அதிலும் அவரது மனம் முழுமையாக  ஈடுபடவில்லை. பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தையே பாலித்திட விழைந்தவர் அல்லவா அவர்? எனவே, மதுரையிலே ஒரு தமிழாசிரியராக மட்டும் தம்வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்ள அவர் விரும்பவில்லை.கவிதையே தொழில் எனக் கொண்டு, இமைப்பொழுதும் சோராது நாட்டிற்கு உழைக்க விரும்பினார் பாரதியார். அவருடைய கவிதை ஓட்டத்திற்கும், விடுதலை உணர்ச்சிக்கும் துணையாக நின்றன பத்திரிகைகள். எழுச்சி ஊட்டும் கவிதைகள், உணர்ச்சி ஊட்டும் கட்டுரைகள் இவற்றை மக்கள் மத்தியிலே எடுத்துச் செல்வதற்குப் பத்திரிகைகள் உதவின. எஞ்சிய நேரங்களில் பொதுக்கூட்டங்களைக் கூட்டினார், சோம்பியிருந்த மக்களுக்குத் தம் பாடல்கள் மூலமும், சொற்பொழிவுகள் மூலமும் உணர்ச்சி ஊட்டினார்; விடுதலை வேட்கையை மக்களிடையே பெருகவிட்டார்.சுதேசமித்திரன்' அக்காலத்தில் தேசிய இயக்கத்திற்குத் துணையாய்ச் செயலாற்றிய பத்திரிகை ஆகும். 'தமிழ்ப் பத்திரிகையின் தந்தை' எனப் பாராட்டப் பெற்ற ஜி.சுப்பிரமணிய ஐயர் தாம் சுதேசமித்திரனின் உரிமையாளராக இருந்தவர். அவர் 1904ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாரதியாரைச் சுதேசமித்திரன் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொண்டார். சுப்பிரணிய ஐயரிடம் பாரதியார், பத்திரிகைப் பயிற்சியை முறையாகப் பெற்றதோடு, அவரது அரிய வழிகாட்டுதலில் நாடறியும் கவிஞரானார். தேசிய இயக்கத்திற்குப் புதிய உயிரும் உருவமும் கொடுத்தார்.
சுதேசமித்திரனில் பணியாற்றிய வேளையில்தான் பாரதியாருக்குத் தங்கம்மாள் என்னும் மகள் பிறந்தார்.1905ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள் வங்காளம் பிரிக்கப்பட்டது. இந்தப் பிரிவினையால் பாரத நாடு முழுவதும் தேசிய உணர்ச்சி அலையெனப் பொங்கி எழுந்தது; அது கிளர்ச்சியாக வெடித்தது. இந்த அலையின் வீச்சு பாரதியாரின் உள்ளத்திலும் மோதியது; இதன் விளைவாக அவர், தீவிர அரசியலில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். இந்த நிலையில் தமது தீவிரமான கருத்துகளையும் கொள்கைகளையும் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் வெளியிட இயலாதது குறித்து வருந்தினார். தம்முடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் எந்த ஒரு தடையும் இல்லாமல் சுதந்திரமாக வெளியிடும் நோக்கோடு அவர் தொடங்கிய புதிய தேசிய இதழே 'சக்கரவர்த்தினி' ஆகும். 'சுதேசமித்திர'னில் பணியாற்றிக் கொண்டே அவர் 'சக்கரவர்த்தினி'யிலும் அவ்வப்போது எழுதிவந்தார். 1905ஆம் ஆண்டு நவம்பர் மாதச் 'சக்கரவர்த்தினி' இதழில் பங்கிம் சந்திரரின் 'வந்தே மாதரம்' என்ற புகழ்பெற்ற பாடலின் மொழிபெயர்ப்பை விளக்கக் குறிப்போடு வெளியிட்டார் பாரதியார்.1905ஆம் ஆண்டு காசியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும், 1906ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டார் பாரதியார். தாதாபாய் நவுரோஜி தலைமையில் நடைபெற்ற கல்கத்தா காங்கிரஸ் மாநாடு இந்திய தேசிய இயக்க வளர்ச்சியில் புதிய வரலாறு ஒன்றைப் படைத்தது. அந்த மாநாட்டில்தான் நவுரோஜி நாட்டிற்குச் 'சுயராஜ்யம் வேண்டும்' என்ற தாரக மந்திரத்தினை முழங்கினார். அந்த மாநாடு பாரதியாரின் அரசியல் வாழ்வில் மட்டுமன்றி, தனிவாழ்விலும் ஒரு திருப்புமுனையை மாற்றத்தை ஏற்படுத்தியது. அம் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பாரதியார், அச்சமயம் டம்டம் நகரிலே இருந்த நிவேதிதா அம்மையாரைத் தரிசித்து அருளுபதேசமும் ஆசியும் பெற்றார்.கல்கத்தா மாநாட்டில் இருந்து சென்னை திரும்பிய பாரதியாரின் உள்ளத்தில் தேசிய உணர்ச்சி கரை புரண்டு ஓடியது; அவரது பார்வையில் புதிய ஒளி வீசியது; 'சுயராஜ்யம் எமது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவோம்' என முழங்கிய பால கங்காதர திலகரின் தலைமையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் மிதவாதியான சுப்பிரமணிய ஐயரின் தலைமையில் இயங்கிய 'சுதேசமித்திர'னில் பாரதியார் தமது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும், சுதந்திரமாகவும் முழுமையாகவும் வெளியிட இயலாமல் தவித்தார்; அவற்றை வெளியிடுவதற்குச் சரியான கருவி தனிப்பத்திரிகை ஒன்றைத் துவங்குவது தான் என்று தெளிந்தார். 'ஆங்கில மோகம்' தலைவிரித்தாடிய அந்தக் காலகட்டத்தில் தமிழிலே நல்லதொரு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற தீவிரமான முயற்சியில் ஈடுபட்டிருந்தார் மண்டயம் திருமலாச்சாரியார்; தாம் புதிதாகத் துவங்க இருக்கும் பத்திரிகைக்குப் பாரதியாரே தகுதியான, சிறந்த பொறுப்பாசிரியர் ஆவார் என்பதை உணர்ந்தார். இருவரது சந்திப்பின் விளைவாக, 1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற மூன்று தாரக மந்திரங்களைத் தனது இலட்சியங்களாகக் கொண்டு 'இந்தியா' பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. தீவிரமான எண்ணமும் உணர்வும் கொண்ட தேசபக்தர்களின் வீரமுரசாக விளங்கியது அப்பத்திரிகை.'இந்தியா' பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் சுதந்திர உணர்வை ஊட்டத்தக்க நாட்டு  நடப்பைக் காட்டக்கூடிய கருத்துப் படங்களை (Cartoons) வெளியிட்டார் பாரதியார். இம் முறையை முதன்முதலில் பத்திரிகைத் துறையில் கையாண்டு வெற்றி கண்டவர் பாரதியாரே ஆவார். இது தவிர வேறு பல புதிய உத்திகளையும் 'இந்தியா' பத்திரிகையில் புகுத்திப் பத்திரிகைத் துறையில் பெரும் புரட்சி செய்தார் அவர். இதனால் 'இந்தியா' பத்திரிகை மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றது. இந்தச் சமயத்தில் பாரதியாரை வ.உ.சிதம்பரனார் சந்தித்தார்; இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர்.'இந்தியா' பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிக்கொண்டே'பால பாரத்' என்ற ஆங்கில வாரப் பத்திரிகையையும் பாரதியார் வெளியிட்டார்; 'இந்தியா' பத்திரிகையின் இணைப்பத்திரிகையாகவே அதனை வெளியிட்டார்.பத்திரிகைப் பணியோடு பாரதியார் அமைதி அடைந்து விடவில்லை; ஓய்வு நேரத்தில் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் அவர் கூட்டம் கூட்டிப் பேசினார். 'வந்தே மாதரம்' என்று முழங்கினார்; நாட்டில் எங்கும் சுதந்திர ஆர்வத்தை ஊட்டினார். கோழையான ஜனங்களுக்கு உண்மைகளைக் கூறினார்; எழுச்சியூட்டும் தேசிய இயக்கப் பாடல்களைப் பாடினார். இந்தக் கால கட்டத்தில் மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், எஸ்.துரைசாமி ஐயர், வி.சர்க்கரைச்செட்டியார், டாக்டர் நஞ்சுண்ட ராவ், சுரேந்திரநாத் ஆர்யா ஆகியோரின் நட்பும் தொடர்பும் பாரதியாருக்குக் கிடைத்தன.1907ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் நாள் பஞ்சாப் சிங்கம் லாலா லஜ்பத்ராய் நாடு கடத்தப்பட்டார். அதனை ஒட்டிச் சென்னையில் மே மாதம்17ஆம் நாள் விபின் சந்திர பாலர் பேசினார். அவரது ஆவேசமான, உணர்ச்சிமயமான சொற்பொழிவு தேசிய எழுச்சிக்கு உரம் ஊட்டியது. விபின் சந்திர பாலரின் சென்னை வருகைக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கும் காரணமாக இருந்தவர் பாரதியார்தான்.சூரத் நகரில் 1907ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் நாள் 23ஆவது காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து மிகுதியான எண்ணிக்கையில் சார்பாளர்களை (delegates) அழைத்துச் செல்வதில் தீவிரம் காட்டினார் பாரதியார். அம் மாநாட்டின் போது திலகர், அரவிந்தர், லஜ்பத்ராய் போன்ற தலைவர்களை அவர் நேரடியாகச் சந்தித்து அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். குறிப்பாக, இக் காலகட்டத்தில் பாரதியார் திலகரின் தீவிரவாதக் கொள்கையை முற்றிலும் ஆதரிக்கத் தொடங்கினார்.
சூரத்தில் இருந்து சென்னை திரும்பிய பாரதியார், முன்னைக் காட்டிலும் முனைப்பாகப் பல புதிய பணிகளில் ஈடுபட்டார். தீவிரவாதிகளுக்கு என்று 'சென்னை ஜனசங்கம்' என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார்; சென்னையில் வெளிநாட்டுப் பொருள்கள் புறக்கணிப்பு இயக்கத்தையும் முழுமூச்சோடு நடத்திக்காட்டினார்; திலகரின் கட்டளையை ஏற்று 'சுயராஜ்ய தினத்தைச்' சென்னையில் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடினார்.பாண்டிச்சேரி என்று அழைக்கப்படும் புதுச்சேரி அக்காலத்தில் பிரஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. 1908 முதல் 1918 வரையிலான பத்து ஆண்டுகளைப் பாரதியார் புதுச்சேரியில் கழித்தார். சூழ்நிலைகளின் கட்டாயத்தால் புதுச்சேரிக்கு வந்த பாரதியாருக்குப் புதிய சூழலும் புதிய நண்பர்களும் இசைவாகவே அமைந்தனர். இலக்கியப் படைப்புகள், சமுதாயச் சீர்த்திருத்தம், அரசியல் விடுதலை ஆகிய அனைத்திலும் அரிதான சாதனைகளைச் செய்து காட்டினார்.பாரதியார் 'இந்தியா' பத்திரிகையில் வாரந்தோறும் நாட்டு நடப்பைக் காட்டும் படங்கள், பாடல்கள், கட்டுரைகள், கருத்துப் படங்கள் (cartoons), தலையங்கங்கள் (editorial) ஆகியவற்றை வெளியிட்டார்; அவற்றின் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டினார். சுருங்கக் கூறின், 'இந்தியா' பத்திரிகையையே கேடயமாகக் கொண்டு ஆங்கில அரசுடன் மோதினார் பாரதியார். இதன் விளைவாக, 'இந்தியா' பத்திரிகையை அடக்கி ஒடுக்கும் நோக்கோடு அரசு கொடியதோர் அச்சுச் சட்டத்தை (Press Act) 1908ஆம் ஆண்டில் பிறப்பித்தது; 'இந்தியா' பத்திரிகை வெளியிடுவதற்குக் காரணமானவர்களைக் கைது செய்யும் உத்தரவையும் போட்டது. எனவே, இந்தச் சூழ்நிலையில் எந்த நேரமும் பாரதியாருக்குப் 'பிடிவாரண்டு' (கைது செய்வதற்கான உத்தரவு) வரலாம் என்பதை அவரது நெருங்கிய நண்பர்கள் உணர்ந்தனர்; சென்னையில் இருந்து 'பிடிவாரண்'டில் அகப்பட்டுக் கொள்வதைவிடப், புதுச்சேரி சென்று, அங்கிருந்து கொண்டே நாட்டுக்குத் தொண்டு புரியலாம் என்று அவர்கள் பாரதியாரிடம் வற்புறுத்திக்கூறினர்; அவரைப் புதுச்சேரி செல்லவும் இசைய வைத்தனர். அதன்படி 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாரதியார் புதுவை சென்றடைந்தார்.புதுச்சேரியில் சிட்டி குப்புசாமி ஐயங்காரின் வீட்டில் நண்பர் சீனிவாஸாச்சாரியார் தந்த அறிமுகக் கடிதத்தால் தங்க இடம் பெற்றார் பாரதியார். ஆனால், அங்கே அவரால் நீண்ட காலம் தங்கியிருக்க முடியவில்லை. சென்னை அரசினரின் தூண்டுதலின் பேரில் பிரஞ்சுக் காவல்துறையினர் குப்புசாமி ஐயங்காரை மிரட்டினர். எனவே அவர் பாரதியாரை வேறு இடம் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டார். இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் பாரதியார் தவித்தபோது எங்கிருந்தோ வந்தார் குவளையூர்க் கிருஷ்ணமாச்சாரியார். அவர் இறுதிவரை
பாரதியாருக்குத் துணையாக நின்றார்; தனிமையிலும் துயரத்திலும் உதவியாக இருந்தார்1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் 'இந்தியா' பத்திரிகை சென்னையில் இருந்து வெளிவருவது நின்று போய் இருந்தது. ஆனால், பாரதியார் புதுச்சேரி வந்த ஒரு மாதத்திற்குள் அச்சகமும் புதுச்சேரிக்கு இரகசியமாக வந்து சேர்ந்தது; மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் புதுவைக்கு வந்து சேர்ந்தார். அக்டோபர் 20ஆம் நாள் மீண்டும் 'இந்தியா' புதுவை மண்ணில் இருந்து புதுப்பொலிவுடன் வீரமுரசு கொட்டத் தொடங்கியது. ஆம். பாரதியார் பிரஞ்சு எல்லையில் வாழ்ந்து கொண்டே, பிரிட்டிஷ் அரசின் மீது போர் தொடுத்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு  சுதந்திர இயக்க வளர்ச்சிக்கு  முன்னைவிட வலிமையோடும் வேகத்தோடும் விறுவிறுப்போடும் தொண்டாற்றினார்; அரசின் அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல், மனம் கலங்காமல் தமது பத்திரிகைப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வந்தார்.பாரதியார் புதுவைக்கு வரும்போது, அவருடைய துணைவியார் செல்லம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். எனவே, செல்லம்மாவை அவரது சகோதரர் கே.ஆர். அப்பாத்துரை கடையத்திற்கு அழைத்துச் சென்றார். பாரதி மிகுந்த ஆர்வத்துடன் மகாகவி காளிதாசனின் 'சாகுந்தலம்' என்னும் வடமொழி நாடகத்தைப் படித்துவந்த சமயத்தில் கடையத்தில் செல்லம்மாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்குச் 'சகுந்தலா' என்று பெயர் வைக்கும்படி கடிதம் எழுதினார் பாரதியார். குழந்தை பிறந்த ஆறுமாதத்திற்குள் செல்லம்மாளும் புதுச்சேரி வந்து சேர்ந்தார்.அரவிந்தர், வ.வே.சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் கூட்டுறவால் 1910ஆம் ஆண்டில் பாரதியாரின் அரசியல் வாழ்க்கை, கலைத்துறை வாழ்க்கை ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டன. இவ்விரு அறிஞர்களின் உறவால் பாரதியார் அமைதியும், ஆறுதலும், வேதாந்த, இலக்கிய இன்பமும் பெற்றார். இதற்கிடையில், பாரதியாருக்குப் புதுச்சேரியில் நண்பர்கள் நிறையக் கிடைத்தனர். இவர்களுள் பரலி சு.நெல்லையப்பர், வ.ராமசாமி., ஆராவமுத ஐயங்கார், பாரதிதாசன் என்ற கனக சுப்புரத்தினம் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்கள் தவிர பாரதியாரின் குடும்ப வாழ்க்கை இயன்ற வரையில் எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற உதவியவர்கள் என்ற முறையில் சிட்டி குப்புசாமி ஐயங்கார், சுந்தரேச ஐயர், கிருஷ்ணசாமி செட்டியார், பொன்னு முருகேசம் பிள்ளை, பாரதியாரின் வீட்டில் வேலை பார்த்து வந்த அம்மாக்கண்ணு என்ற பெண்மணி ஆகியோரையும் இங்கே குறிப்பிட வேண்டும்.1912ஆம் ஆண்டு பாரதியார் வாழ்க்கையில் உழைப்பு மிகுந்த ஆண்டு எனலாம். இந்த ஆண்டில்தான் அவர் பல அற்புதமான இலக்கியங்களைப் படைத்தார்; குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் முப்பெரும் காவியங்களை இயற்றினார்; பகவத் கீதையைத் தமிழில் மொழி பெயர்த்தார்; பதஞ்சலி யோக சூத்திரத்திற்கு உரை எழுதினார்.
பாரதியார் புதுச்சேரியில் பற்பல நற்செயல்களைச் செய்தார். இந்தியாவைப் பற்றியுள்ள சாதி வேற்றுமையும் தீண்டாமைக் கொடுமையும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார். எல்லோரையும் ஒரு குலமாகவே கருதிய அவர், அனைவர்க்கும் வழிகாட்டியாகவே வாழ்ந்தார். 1913ஆம் ஆண்டில் கனகலிங்கம் என்ற ஆதி திராவிடச் சகோதரருக்குப் பூணூல் அணிவித்தார். இதில் குறிப்பிடத்தக்க ஒரு வியப்பு என்னவென்றால், பாரதியார் தாம் பூணூல் அணிவதை நீண்ட காலத்திற்கு முன்பே விட்டு ஒழித்திருந்தார். அவர் தமது புதுச்சேரி வாழ்க்கையின்போது சிறிது காலம் தாடி மீசை வளர்த்து வந்தார்; வைணவ ஆழ்வார்களைப் போலவே திருநாமமும் தரித்துக் கொண்டார். பாரதியார் 1908 முதல் 1918 வரை ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வனவாசம் செய்து, காவியங்கள் பலவற்றைப் படைத்தும், மொழி பெயர்ப்புப் பணிகள் புரிந்தும், பத்திரிகைகளில் படைப்புக்கள் பலவற்றை வெளியிட்டும் தமிழன்னைக்குப் புதிய அணிகளையும், பாரத மாதாவுக்குப் பல தேசிய அணிகளையும் அணிவித்து மகிழ்ந்தார். பாரதியாரின் புதுவை வாழ்க்கையைத் 'தமிழ் இலக்கிய உலகின் பொற்காலம்' என்றே ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
'அரண் இல்லாச் சிறையில் விலங்கு இல்லாக் கைதி'யாகப் புதுவையில் வாழ்ந்து வந்த வாழ்க்கை கசந்ததால், பாரதியார் புதுச்சேரியை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்தார். அதன்படி 1918ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் அவர் தம் குடும்பத்துடன் புதுச்சேரியை விட்டுக் கிளம்பினார். பாரதியார் பிரிட்டிஷ் எல்லையில் கால் வைத்ததுதான் தாமதம்; வில்லியனூருக்கு அருகில் ஆறாவது மைலில் தலைமைக் காவலர் ஒருவரால் கைது செய்யப்பெற்றார்; கடலூர் சிறைச்சாலையில் இரண்டு நாள் அவரை வைத்திருக்கும்படி நீதிபதி உத்திரவிட்டார். பாரதியார் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த 'சுதேசமித்திரன்' ரெங்கசாமி அய்யங்கார், எஸ்.துரைசாமி ஐயர் ஆகியோர் அவரது விடுதலைக்காக முயற்சி எடுத்தனர். 22 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 1918 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் பாரதியாரை விடுதலை செய்தது ஆங்கில அரசு. சிறையில் இருந்து வெளிவந்த அவர், சென்னை வந்து, அதன் பிறகு தமது மனைவியின் ஊரான கடையத்திற்குச் சென்றார்.பாரதியார் வாழ்க்கையின் கடைசி மூன்று ஆண்டுகளிலும் துயரமும், சோதனைகளும், ஏமாற்றங்களும் தாம் கலந்து இருந்தன. ஆயினும் கொள்கைப் பிடிப்பில் தளராமலும், மனம் சோராமலும் பாரதியார் அனைத்தையும் எதிர்கொண்டார். மக்கள் தூற்றியதைப் பொருட்படுத்தாமல் தம் சீர்திருத்தப் பணிகளைத் தொடர்ந்தார். கவிஞன் என்ற பெயருக்கு மாசுபடாமல் கௌரவம் காத்தார். இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் கடையத்திலும் ஓர் ஆண்டு சென்னையிலும் வாழ்ந்தார்.பாரதியார் ஏறத்தாழ இரண்டு ஆண்டுக் காலம் கடையத்தில் வாழ்ந்தார். அங்கு இருந்தபடியே 'சுதேசமித்திர'னுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார்; 'கலா நிலையம்' என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் வாயிலாகத் தமிழ்ப்பணி புரிய விரும்பினார். தனி மனித சுதந்திரம்  சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயம்  ஆண், பெண் நிகர்  கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகச் செய்தல் முதலான தம் சீரிய கனவுகளை முற்போக்கான சிந்தனைகளைச் செயற்படுத்த முற்பட்டார்; ஆயின், கடையம் மக்களோ அவரைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் தூற்றினர். இதனால் சலிப்பும் சோர்வும் உற்றார் பாரதியார்
.கடையத்தில் பாரதியாருக்கு இருக்க விருப்பமில்லை. எனவே, அவர் திருவனந்தபுரம், எட்டயபுரம் ஆகிய ஊர்களிலும் சிறிது காலம் வாழ்ந்தார். எட்டயபுரத்தில் தங்கியிருந்த சமயத்தில்  1919ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள் தமக்கு உதவி செய்ய வேண்டி வெங்கடேச எட்டப்ப பூபதி ஜமீன்தாருக்கு இரு சீட்டுக்கவிகள் எழுதினார். இவற்றின் வாயிலாகப் பாரதியாரின் உள்ளப் பாங்கினை நம்மால் நன்கு அறிந்துகொள்ள முடிகின்றது. பன்னிரண்டு ரூபாய்க்குச் சேவகம் செய்துவந்த பழைய சுப்பையாவாகத் தம்மைக் கருதாமல், கவியரசனைப் புவியரசன் தக்கபடி ஆதரிக்க வேண்டும் என்பதை இச்சீட்டுக்கவிகள் விளக்குகின்றன. வறுமையில் உழன்றாலும் தன்மானம் இழக்கத் துணியாத பாரதியாரின் செம்மையான உள்ளப் பண்பே இங்குச் சுடர் விட்டு நிற்கின்றது எனலாம்.
பாரதியாருக்கு ஜமீன்தாரிடம் இருந்து உதவி கிடைக்கவில்லை. அவரது வாழ்க்கையில் சோதனைகள் தொடர்ந்தன. என்றாலும், மனம் கலங்காத பாரதியார் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதன் மூலம் தம் கவலைகளை மறந்தார்; திருநெல்வேலிக்கு அடிக்கடி வந்து கவிதைகள் பாடி மக்களை மகிழ்வித்தார். 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை சென்றபோது ராஜாஜி இல்லத்தில் பாரதியார் காந்தியடிகளைச் சந்தித்தார்; காந்தியடிகள் தொடங்கப் போகும் இயக்கத்திற்குத் தம் வாழ்த்துகளைத் தெரிவித்தார்; அன்று மாலை திருவல்லிக்கேணிக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் 'வாழ்க நீ எம்மான்' என்ற பாடலால் காந்தியடிகளை மனங்குளிர வாழ்த்திப் பாடினார்.சென்னையில் சிலநாள்கள் தங்கி இருந்துவிட்டு, மீண்டும் கடையம் புறப்பட்டார் பாரதியார். பின்னர், அவர் கானாடு காத்தான், காரைக்குடி ஆகிய ஊர்களுக்குச் சென்று வந்தார்; தம் கவிதைத் திறத்தாலும் சொல்வன்மையாலும் மக்களைக் கவர்ந்தார். 1920 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் நாள் பொட்டல்புதூரில் 'இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை' என்ற பொருள் பற்றி உரையாற்றினார். இந்நிலையில் தமது நூல்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் பாரதியார் உள்ளத்தில் எழுந்தது; தமது நூல் வெளியீட்டுத் திட்டத்தை விளக்கி மதுரை நண்பர் சீனிவாச வரதனுக்குக் கடிதம் எழுதினார்; நூல் வெளியீட்டுத் திட்டத்தை விளக்கிச் சுற்றறிக்கையாகவும் பலருக்கு அனுப்பி வைத்தார். வழக்கம் போலவே இம் முயற்சியிலும் பாரதியாருக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.1920ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் பணியாற்ற வருமாறு மீண்டும் ரெங்கசாமி ஐயங்காரிடமிருந்து பாரதியாருக்கு அழைப்பு வந்தது; அதனை ஏற்று அவர் சென்னை சென்றார்; 'சுதேசமித்திர'னில் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார்; தம் இயற்பெயரிலும், 'காளிதாசன்', 'சக்திதாசன்' என்னும் புனைபெயர்களிலும் தம் படைப்புகளை எழுதிவந்தார்.
சென்னையில் பாரதியார் முதலில் தம்புச்செட்டித் தெருவிலும், பின்னர் திருவல்லிக்கேணியில் துளசிங்கப்பெருமாள் கோயில் தெருவிலும் வாழ்ந்து வந்தார். இக்காலகட்டத்தில் பாரதியாருக்கு வ.வே.சுப்பிரமணிய ஐயர், குவளைக் கிருஷ்ணமாச்சாரியார், சுரேந்திரநாத் ஆர்யா, துரைசாமி ஐயர் ஆகியோருடன் மீண்டும் கலந்து உறவாடும் வாய்ப்புக் கிடைத்தது. இவர்களுடன் உரையாடிப் பொழுதுபோக்குவது பாரதியாரின் அன்றாடத் தொழில் ஆயிற்று. பத்திரிகையில் பணியாற்றிய நேரம் போக, மீதியுள்ள நேரத்தில் அவர் வெளியூர்களுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றினார்: கூட்டங்களில் உணர்ச்சி மிக்க குரலில் பாடினார். 1921 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் நாள் அவர் கடலூர் சென்று பேசினார்.பாரதியார் சென்னையில் வாழ்ந்த காலகட்டத்தில் இறை வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். நாள்தோறும் பார்த்தசாரதி கோயில் சென்று வழிபாடு செய்துவந்தார். அக்கோயில் யானையுடன் மிக நெருங்கிப் பழகினார்; யானைக்குத் தேங்காய், பழம் முதலியன கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டார். அந்த யானைக்கு ஒரு நாள் திடீரென்று மதம் பிடித்துக் கொண்டது. வழக்கம்போல் பாரதியார் யானையிடம் சென்றார்; அங்கே இருந்தவர்கள் எச்சரித்தும் கேளாமல் அதற்குத் தின்பண்டம் அளித்தார். கோயில் யானை பாரதியாரைத் துதிக்கையால் தூக்கிப் போட்டுவிட்டது. காயமுற்று, உணர்விழந்த நிலையில் யானைக்குச் சற்றுத் தொலைவிலேயே விழுந்த பாரதியாரை, குவளையூர் கிருஷ்ணமாச்சாரியாரே துணிவுடன் வந்து காப்பாற்றினார்.
பாரதியாருக்குத் தலையிலும் உடம்பிலும் காயம் ஏற்பட்டதால், உடனடியாக இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பெற்றது. சில நாட்களில் அவர் உடல்நலம் பெற்றார். என்றாலும், முன்பு போல் உடம்பு அவ்வளவு தெம்பாக இல்லை. வழக்கம் போல் 'சுதேசமித்திரன்' அலுவலகம் சென்று அவர் தமது பத்திரிகைப் பணிகளைக் கவனித்து வந்தார்; வெளியூர்களுக்குச் சென்று அவ்வப்போது சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வந்தார். 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு நாளில் பாரதியார் ஈரோடு சென்றார்; ஈரோட்டை அடுத்த கருங்கல்பாளையத்தில் இருந்த வாசகசாலை ஆண்டு விழாவில் 'மனிதனுக்கு மரணமில்லை' என்ற பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றினார்; ஆகஸ்ட் 2ஆம் நாள் ஈரோட்டில் வாய்க்கரையில் 'இந்தியாவின் எதிர்கால நிலை' என்பது பற்றி உரையாற்றினார். முதல்நாள் ஆன்மிகச் சொற்பொழிவு; அடுத்த நாள் அரசியல் சொற்பொழிவு. ஆன்மிகத்தையும் அரசியலையும் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த பாரதியாரின் இறுதிச் சொற்பொழிவுகள் இவையே ஆகும்.யானையால் தாக்குண்ட அதிர்ச்சியினின்றும் பாரதியார் ஓரளவு நலம் பெற்றார் என்றாலும், உடல் மட்டும் முழுவதும் தேறவில்லை. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அவரது உடல்நிலை சீர்கெட்டது; வயிற்றுக் கடுப்பு நோய் அவரை வாட்டியது. ஏற்கனவே உடல் நலிவுற்றிருந்த நிலையில் நோயை எதிர்த்து நிற்பதற்கு உரிய ஆற்றல் பாரதியாரின் உடலில் இல்லை. மருந்து உண்ணுமாறு நண்பர்களும் உறவினர்களும் வற்புறுத்திக் கூறியதைப் பாரதியார் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் நோயின் கடுமையால் பாரதியார் பெரிதும் துன்புற்றார்; அன்று நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில், அவர் உயிர் பிரிந்தது ஆம்; தமது முப்பத்தொன்பதாம் வயது முடியும் முன்னரே மரணமடைந்தார் மகாகவி பாரதி.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.